Ads (728x90)

வறுமையை இல்லாதொழிக்கும் நோக்கில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் ஜனவரி 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தாம் வசிக்கும் பிரதேசத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுடன் மாதாந்தம் 35,000 ரூபா சம்பளம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

சுபீட்சத்தினை நோக்கிய கொள்கை பிரகடனத்தை மையப்படுத்தி அபிவிருத்தி நோக்கிய முதலாவது கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது

மிகவும் வறிய மட்டத்திலுள்ள, சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி இருந்தும் அது கிடைக்கப் பெறாத குடும்பங்களை கட்டியெழுப்புதல் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் குறிக்கோளாகும்.

இந்த திட்டத்தின் ஊடாக அத்தகைய குடும்பங்களில் தொழில்துறைக்கு பங்களிப்பு வழங்க கூடியவர்களை அவர்களுக்கு பொருத்தமான துறைகளில் பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

எவ்வித கல்வித்தகமையும் பெறாத அல்லது குறைந்த கல்வித்தகைமை கொண்ட பயிற்றப்படாதவர்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் முதலாம் கட்டமாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களை வழி நடத்துவதற்கும், முகாமைத்துவம் செய்வதற்குமு் என மேலும் 30,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளது.

சுமார் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு முகாமைத்துவ மற்றும் வெளிக்கள அலுவலர் மட்டத்தில் மேற்பார்வை செய்வதற்கான வேலைவாய்ப்புகளும் இதனூடாக உருவாக்கப்படவுள்ளது.

அவர்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள கல்வித் தகைமைகள் தேவைப்படாத வெற்றிடங்களுக்காக உள்ளீர்க்கப்படுவர். தச்சுத் தொழில், விவசாயம், மீன்பிடி, வனப்பாதுகாப்பு போன்ற துறைகளுக்காக அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த செயற்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.பாதுகாப்பு அமைச்சினதும், முப்படையினரதும் மேற்பார்வையில் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்குதல் இடம்பெறும்.

இத்திட்டம் தனது தேர்தல் செயற்பாடுகளின் போது உருவான திட்டமென்பதை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, வினைத்திறனான முறையில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினர். இந்த திட்டத்தின் ஊடாக வறிய குடும்பங்கள் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டு பொருளாதாரரீதியில் வலுவடைவார்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget