Ads (728x90)

ஆடி அமாவாசை போன்று தை மாதத்தில் வருகின்ற அமாவாசை விரதமும் சிறப்புப் பெறுகின்றது. இந்த அமாவாசை தினத்தில் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர்.

அமாவாசை திதிகளில் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியவற்றுக்க முக்கிய இடம் உண்டு. தை அமாவாசை அன்று ஆண்டின் ஏனைய மாத அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.

இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண காலத்தில் ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணா காலத்தில் ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை ஆடி அமாவாசை எனவும் அன்றைய தினம் தர்ப்பணம், திதி, பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம். சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமை இதுவாகும். இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, காகம் அதனை உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம் நிலவுகின்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget