Ads (728x90)

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக நான் தெரிவிக்கும் கருத்துக்களில் கவனமாய் இருத்தல் அவசியம் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். நான் அவருக்கு கூற விரும்புவது நான் எனது கருத்துக்களை மிகவும் எச்சரிக்கையுடனும், அளந்துமே தெரிவித்து வருகிறேன்.

அவரது அறிவுரை எனக்கு ஆச்சரியத்தை தருவதோடு விநோதமாயும் உள்ளது. இதே சரத் பொன்சேகா முன்னொரு காலத்தில் இராணுவத் தளபதியாகவிருந்த வேளையில், இலங்கை ஒரு சிங்கள பௌத்த மரமெனவும், ஏனைய இனங்கள் அச்சிங்கள மரத்தின் மீது படரும் கொடிகள் போன்றன என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இவை தான் ஒரு இனவாதி இல்லை என காட்டிக் கொள்ள முயலும் ஒருவரின் வார்த்தைகள் அல்ல. அவரது பதவி பறி போய் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அவரது நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். இனவாதத்தை கக்கிய அவர் எனக்கு இந்த அறிவுரையை கூறுவது ஒவ்வாதாதாக எனக்கு தென்படுகிறது.

இந்த நாட்டின் ஒருபகுதியாக உள்ள வடக்கு கிழக்கானது ஒரு யுத்தத்தை எதிர்கொண்ட பிரதேசம் என்பதை தாங்கள் அறிவீர்கள். அந்த பிரதேசமானது வேண்டுமென்றே அழிக்கப்பட்டது. 32 வருடங்களாக நாம் ஒரு யுத்தத்தை எதிர்கொண்டோம். அவ்வேளையில் ஜெனரல் பொன்சேகாவாக யாழ்ப்பாணத்தின் இராணுவத் தனபதியாக பதவி வகித்த போது வடக்கு கிழக்கில் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தது.

32 வருட முழுமையான அழிவின் பின்னர் வடக்கு கிழக்கினை இத்தீவின் ஏனைய பிரதேசங்களோடு சேர்த்துப் பார்ப்பது சரியானது அல்ல. அப்பொருளாதாரம் 32 வருடங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு ஈடாக வடக்கு- கிழக்கு மக்கள் போட்டியிடுபவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.

ஆகையால் வடக்கு- கிழக்கு பிரதேசமானது ஒருமித்தும் இத்தீவின் ஏனைய பிரதேசங்களினை விட வேறாகவும், தனித்தும் நோக்கப் பட வேண்டும். வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அப்பிரதேசத்தம் தனித்துவமாக அணுகப்பட வேண்டும். அவர்கள் மற்றைய மாவட்ட மக்களுக்கு இணையாக அணுகப்பட்டால் அவர்கள் இரு மரணச் சக்கரத்திற்குள் தள்ளப்படுவார்கள். இறுதியில் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு வலிந்து நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அவலத்திற்குள்ளானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களே. காரணம் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அவர்களது குடும்பங்களிற்கான பொருளீட்டுநர்களாகவே இருந்தனர். கடந்த 4 வருடங்களாக இச்சொந்தங்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினம் அனுட்டிக்கப்படவிருக்கின்றது. எங்களது பார்வையில் அவர்களது போராட்டங்களுக்கு நாம் பூரண ஆதரவை வழங்கவேண்டும். நாங்கள் அதனைச் செய்கிறோம். அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டுமானால் அதற்கான ஒரே வழி நீதிக்கான ஒரு சர்வதேச விசாரணையாகும். இதற்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம். அதுவே நமக்கு வழங்கப்பட்ட ஆணையுமாகும்.

இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget