Ads (728x90)

கடனை மீளச் செலுத்த முடியாத மற்றும் புதிதாக கடன் பெறுவதற்கு
வரும் பொதுமக்களை வங்கி நடவடிக்கைகளின் போது தேவையற்ற சிரமத்திற்கு உட்படுத்த வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வங்கி கடன்களுக்கு பிணையாளிகளாக நின்றோர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
நிதி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று அமைச்சில் இடம்பெற்றபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

கடன் பெற்ற ஒருவர் அதனை மீள செலுத்த தவறும் பட்சத்தில், அவருக்கு உத்தரவாதம் நிற்கும் நபரின் பெயர் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் தரவுகளில் உள்ளடக்கப்படுவதால், குறித்த நபர் கடனொன்றை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவராக விளங்குகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், அதற்கு உரிய நிவாரண நடைமுறைகளை பின்பற்றுமாறு கூறியுள்ளார்.

அரசியல் பாகுபாடின்றி குறைந்த வருமானம் பெறும் அனைத்து குடும்பங்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் ”வளமான எதிர்காலம்” (சபிரி கமக் ) வேலைத்திட்டத்திற்காக 28 பில்லியன் ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டின் 14 ஆயிரத்து 21 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் 02 மில்லியன் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் பிரதமரின் ஆலோசனைக்கேற்ப கிராமிய சனசமூக குழுக்களின் மூலம் தெரிவு செய்யப்பட்ட திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

இந்தச் சந்திப்பில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதி, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன், அரச வங்கிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget