Ads (728x90)


எதிர்கால சந்ததியினர் கல்வியில் கைவிடப்படாமல் இருப்பதற்காக முன்பள்ளி முதல் உயர் கல்வி வரை அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கிய வகையில் அமைந்த திட்டமொன்றை தயாரித்து செயற்படுத்துவதே அரசின் முதன்மையான குறிக்கோள் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்பள்ளி கல்வி தொடர்பாக இதுவரை உரிய அவதானங்களோ, ஒழுங்குவிதிகளோ இருக்கவில்லை. அதனால் சிறுவர் கல்வி தொடர்பான வல்லுநர்களின் ஒத்துழைப்புடன் முறையான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தெளிவான மனதுடன் கல்வியை பெற்றுக்கொள்ளும் பின்புலத்தை பிள்ளைக்கு ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் பிள்ளைகளை தொடர்ச்சியாக பாராட்டுதல் பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் பொறுப்பாகும். 

பணம் அறவிடப்படாத முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்கவும், பயிற்சிகளை வழங்குவது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது.

முன்பள்ளி பிள்ளைகளின் திறமைகளை அபிவிருத்தி செய்வதற்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம். நாட்டில் அனைத்து பாடசாலைகளிலும் உள்ள வளங்களை இனங்கண்டு உரிய முறையில் முகாமைத்துவம் செய்வது அதிகாரிகளினதும் நிர்வாகிககளினதும் முதன்மைப் பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் பொறுப்பதிகாரிகள் அலுவலக செயற்பாடுகளில் முடங்காமல் பாடசாலைகளுக்குச் சென்று பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்க வேண்டும். ஆசிரியர்கள் கல்வி காரியாலயங்களுக்கு வருவதற்கு பதிலாக அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் முறைமையின் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வகுப்பறையில் இருந்து வெளியேறும் பிள்ளை தமது கதிரை மற்றும் மேசையை உரிய முறையில் வைத்துச் செல்வதற்கு பழக்கப்படுத்துவது முதல் நாட்டை, சமூகத்தை விரும்பக்கூடிய கருத்துரீதியான மாற்றத்தைக் கொண்ட குடிமகனாக உருவாகக்கூடிய கல்வி முறையொன்று தயாரிக்கப்படுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தமது தொழில்ரீதியான தேவைகளுக்காக வலய காரியாலயங்களுக்கு செல்லும் ஆசிரியர்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் பற்றி தமது அதிருப்தியை தெரிவித்த பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச, அனைத்து பாடசாலைகளினதும் குடிதண்ணீர் மற்றும் சுகாதார தேவைகளை குறுகிய காலத்தில் நிறைவு செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.

சிறப்புத் தேவையுடைய சிறுவர்களை சமூகமயப்படுத்தக் கூடிய வகையில் அவர்களின் திறமைகளை அபிவிருத்தி செய்யும் வகையில் சிறப்புக் கல்வி அலகொன்றை மாவட்டரீதியாக அமைப்பது தொடர்பாகவும் அரசு கவனம் செலுத்தியுள்ளது எனவும் பசில் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget