தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது.
இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால் முடியாது என்று கட்டளையிடப்பட்டது.
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நடத்தக் கோரிய மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திகுமார், கஜேந்திரன் மற்றும் இம்மானுவேல் ஆர்னல்ட், மாநகர சபை உறுப்பினர் வரதராசா பார்த்திபன், அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க. சுகாஷ், க.விஸ்னுகாந்த், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரன், தமிழ் அரசுக் கட்சியின் பிருந்தாபன் உள்ளிட்ட 20 பேரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஊடாக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை ஏற்படும் என்று பொலிஸாரால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை அழைக்கப்பட்டது. பொலிஸாரின் விண்ணப்பம் மன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டது.
அத்தோடு வழக்கு செப்ரெம்பர் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த வழக்கில் பிரதிவாதிகள் 20 பேரையும் மன்றில் முன்னிலையாக அழைப்புக் கட்டளை வழங்கியிருந்தது.
அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த 21ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையை அடுத்து தடையை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. எதிர்வரும் 14 நாட்களிற்கு தடை நீடிக்கும் எனவும் வழக்கு மீள அழைக்கப்படாது எனவும் தீர்ப்பளித்தது.

Post a Comment