மினுவாங்கொடை பகுதியில் தகவலின்றி இருந்த 400 பேர் நேற்று நண்பகல் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சுகாதார தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அல்லது அங்கு தங்கியிருந்து குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களில் 275 பேர் நேற்று பொலிஸாரின் விஷேட அறிவிப்பின் பிரகாரம் உரிய இடங்களுக்கு வருகை தந்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்நிலையில் பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட 14 விஷேட இடங்களுக்கு வருகை தந்து தம்மை பதிவு செய்து தனிமைப்படுத்தலில் ஈடுபடாது மறைந்திருந்த பிராண்டிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு இறுதி அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இதன்போது 125 பேர் தமது தகவல்களை வெளிப்படுத்தி சுகாதார தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் பிராண்டிக்ஸ் கொரோனா கொத்தணி வலயத்துடன் நேரிடை தொடர்புபட்ட மேலும் பலர் தலைமறைவாகியுள்ளமை பொலிஸ் மற்றும் சுகாதாரபிரிவு சேகரித்துள்ள தகவல்கள் மூலம் வெளிப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க விஷேட புலனாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment