நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலிருந்து 2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பசிப்பிணி போக்குதல் மற்றும் போரைத்தவிர்த்து அமைதியை காத்தலுக்காக இந்த விருதிற்கு உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், இரசாயனவியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தாண்டிற்கான துறை வாரியான நோபல் பரிசுகள் கடந்த 05 ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்டு வந்தது. அதன்படி முதல் நாள் மருத்துவத்துறைக்கும், இரண்டாம் நாள் இயற்பியல் துறைக்கும், மூன்றாம் நாள் இரசாயனவியல் துறைக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் நான்காம் நாள் இலக்கியத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நேற்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 53 ஆண்டுகளாக 83 நாடுகளில் 09 கோடி பேருக்கு உணவு வழங்கி சேவையாற்றி வந்ததால் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான இந்த நோபல் பரிசு 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி வாய்ந்ததாகும்.
இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ளும் 101 ஆவது வெற்றியாளராக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் பதிவாகியுள்ளது.

Post a Comment