பாஷையூரிலுள்ள தனியார் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் பாசையூர் மேற்கு, திருநகர் ஆகிய கிராமசேவையாளர்கள் பகுதிகள் நேற்று முதல் முடக்கப்பட்டன.
சுகாதார திணைக்களத்தின் கோரிக்கையின் பெயரில் இராணுவத்தால் இப்பிரதேசம் முடக்கப்பட்டது.
பேலியகொட மீன் சந்தைக்குச் சென்ற இவர்கள் கடந்த வெள்ளியன்று அங்கிருந்து குருநகர் வந்திருந்தனர். ஞாயிறன்று அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையை அடுத்து சன நெருக்கம் அதிகமுள்ள குருநகர் மற்றும் பாஷையூர் பகுதியில் ஏனையவர்களுக்கும் கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக அப்பகுதிகளைச் சாராதவர்கள் மற்றும் வெளியாட்கள் உட்செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவக் காவலரண்கள் அமைக்கப்பட்டு படையினர் வீதிகளில் கடமை புரிகின்றனர். பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் முடக்கப்பட்ட இப்பகுதிக்கு இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று முதல் பொதுமக்கள் போய்வரலாம் என சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment