இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் இன்று தொடக்கம் அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என இராணுவ தளபதியும், கொரோனா எதிர்ப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் இதுவரை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
எனினும் நாட்டில் இராணுவத்தினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தவர்களை இன்று முதல் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை கடுமையாக பின்பற்றவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்கள் பி.சி.ஆர் சோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீடுகளிற்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment