பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாமல் வடமாகாணத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது என மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண கூறியுள்ளார்.
யாழ். நகரில் இன்று பொலீசாரினால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்து கொண்ட வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை நான் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பின் கொரோனா ஒழிப்பு தொடர்பில் போலீசாரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக இன்றைய தினம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்கள் முகக்கவசம் அணிதல் தொடர்பான ஒரு விழிப்புணர்வு செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றோம்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரைக்கும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
அதாவது சுகாதார திணைக்களத்தினரின் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.அதாவது சமூக இடைவெளியானது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
தற்போதைய சூழ்நிலையில் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கட்டாயமாக சமூக இடைவெளி பேணுதல் வேண்டும். அத்தோடு மக்கள் பெரும்பாலும் வீடுகளில் இருந்து தங்களுடைய கடமைகளைச் செய்வது மிகச் சாலச் சிறந்தது.
எனினும் வடக்கு மாகாணத்தில் குறித்த தொற்றினை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் பொதுமக்களின் ஒத்துழைப்புடனே அது சாத்தியமாகும். அத்துடன் வீட்டை விட்டு வெளியில் வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும்.
தற்கால சூழ்நிலையில் தங்களையும், தங்களுடைய சமூகத்தினையும் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment