Ads (728x90)

பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு உள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் நினைவு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட பொங்கு தமிழ் நினைவு நாள் அறிக்கையும் வாசிக்கப்பட்டது. 

மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

“முள்ளிவாய்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் தங்களது நினைவு உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு காலப் பின்னணியில் நாங்கள் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூறுகின்றோம்.

2001ஆம் ஆண்டு ஜனவரி 17 இல் தமிழ் மக்கள் தங்களது இன உரிமைகளை வலியுறுத்தி உலகெங்கும் அவற்றை பறைசாற்ற மிகுந்த எழுச்சியோடு இராணுவ அச்சுறுத்தல் மத்தியிலும் யாழ்ப்பாணபு் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடினார்கள். அவ்வாறாக அவர்கள் ஒன்றுகூடி வந்தபொழுது மேற்கொண்ட பிரகடனத்தை நாம் இங்கு கல்வெட்டாக வடித்து வருடா வருடம் நினைவு கூறுகின்றோம்.


தமிழ் மக்களது அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்கின்ற விடையங்களை இந்த பிரகடனம் உள்ளடக்கி நிற்கின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த பொங்கு தமிழ் உலகின் பல நாடுகளிலும் அங்கு வாழும் தமிழ் மக்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு உலகம் முழுவதற்கும் தமிழ் மக்களது அடிப்படை அபிலாசைகளை எடுத்துரைத்து வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை இந்த பொங்கு தமிழ் நிகழ்வும், இங்கு நிறுவப்பட்டிருக்கும் பொங்கு தமிழ் பிரகடன கல்வெட்டும் பறைசாற்றி நிற்கின்றது. காலாதி காலமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் எடுத்து வந்த தமிழ்த்தேசிய நிலைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இக்காலகட்டத்தில் நமது பொங்கு தமிழ் பிரகடன நினைவுகூரல் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஆகவே மீண்டும் ஒருமுறை இந்த வருடமும் சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என மீண்டும் உரத்து ஒலிப்போம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget