நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். மத்திய மாகாணத்தில் 522 தமிழ் பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 222 தமிழ் பாடசாலைகளும் உள்ளன. இவ்விரு மாகாணங்களிலும் தமிழ்மொழி மூல கல்வி மேம்பாட்டுக்காக தமிழ் கல்வி அமைச்சுகள் உருவாக்கப்பட்டிருந்தன.
1988 இல் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மலையக மக்களுக்கானதொரு உரிமையாக இவை கிடைக்க பெற்றன.
ஆனால் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆறு மாதங்களுக்கு முன்னர் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு இல்லாது செய்யப்பட்டது. தற்போது ஊவா மாகாணத்தின் தமிழ் கல்வி அமைச்சும் பறிக்கப்பட்டுள்ளது. இது பெருந்தோட்ட மக்களுக்கு செய்யப்படும் அநியாயம். மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்.
தமிழ் கல்வி அமைச்சு இருந்தால் கல்விப்பணிப்பாளர் நியமனம், ஆசிரியர் நியமனம், சிற்றூழியர் நியமனம் என பல விடயங்களை செய்யலாம். தமிழ்மொழி மூல கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். தற்போது அந்த அமைச்சும் இல்லாமல் செய்யப்பட்டமை மலையக கல்வி வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment