வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது பெய்துவரும் மழை எதிர்வரும் 13ம் திகதிவரை நீடிக்கும் என யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள தாழமுக்கம் நாளை தொடக்கம் வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இக்காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளில் மிகக் கன மழை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.
குறிப்பாக கரையோரப் பகுதிகளில் மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளது. இத்தாழமுக்கம் புயலாக கூட வலுப்பெற்று இந்தியாவின் தமிழ்நாட்டின் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக எதிர்வரும் 10, 11, 12 ஆம் திகதிகளில் 150மி.மீ. மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்வரும் நாட்களில் கிடைக்கவிருக்கும் கனமழை தாழ்வான பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கலாம்.
எனவே மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் எதிர்வரும் 13.11.2021 வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது எனவும் கூறியுள்ளார்.
Post a Comment