தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை ஆகியவற்றை நடாத்துவதற்காக கல்வி அமைச்சரால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குறித்த நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று நிலைமையால் 06 மாதங்களின் பின்னர் முழுமையாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 2021 ஒக்ரோபர் மாதம் 25 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்காக 2021 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
அதற்கமைய பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக போதுமானளவு காலம் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்கிணங்க 2021 ஆம் ஆண்டில் குறித்த பரீட்சைகளை நடாத்துவதற்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 2022 ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி சனிக்கிழமையும், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2022 ஆண்டு பெப்ரவரி 07 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2022 மார்ச் 05 ஆம் திகதி சனிக்கிழமை வரையும், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை 2022 ஆண்டு மே 23 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2022 யூன் 01 ஆம் திகதி புதன்கிழமை வரையும் நடைபெறவுள்ளது.
Post a Comment