தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிவதில் விசேட அவதானம் செலுத்துமாறு இலங்கை மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
'இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதும், அவ்விடங்களில் இருந்தவர்கள் மீதும் நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறைத்தாக்குதல்கள் குறித்து நாம் மிகுந்த கவலையடைகின்றோம்.
அதேவேளை தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிவதில் விசேட அவதானம் செலுத்துமாறு நாம் இலங்கை மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்' என்று அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக திங்கட்கிழமை அலரி மாளிகையில் ஒன்று திரண்ட குழுவினர், அலரி மாளிகைக்கு முன்பாக காலி வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 'மைனா கோ கம' கூடாரங்களை உடைத்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாகத் தாக்கினர்.
அதனைத் தொடர்ந்து காலி வீதியின் ஊடாக காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த 'கோட்டா கோ கம' விற்குச் சென்று அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்களை எரித்து, போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து நாடளாவிய ரீதியில் வன்முறைகள் வெடித்து அமைதியற்ற நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment