Ads (728x90)

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பில் பிரித்தானியா தலைமையில் அமெரிக்கா,கனடா, ஜேர்மனி, மாலாவி, மொன்டெனிக்ரோ, வட மெசிடோனியா ஆகிய இணை அனுசரணை நாடுகளால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய பிரேரணை நேற்று 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 20 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், எதிராக 7 நாடுகள் வாக்களித்துள்ளன. 20 நாடுகள் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

அமெரிக்கா, பிரித்தானியா, உக்ரைன், கொரியா, ஆர்ஜன்டீனா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மன், மெக்சிக்கோ உள்ளிட்ட 20 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

சீனா, பாகிஸ்தான், கியூபா, எரித்திரியா, உஸ்பெகிஸ்தான், வெனிசுவேலா, பொலிவியா ஆகிய நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளன.

இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா, லிபியா, மலேஷியா, நேபாளம், கட்டார், சோமாலியா, சூடான், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், காணாமல்போனோர் விவகாரம், அதிகாரப்பகிர்வு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உள்ளடங்கலாக அனைவருக்குமான சமத்துவம் ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட வேண்டிய கடப்பாடுகள் குறித்து மீளநினைவுறுத்தியிருக்கும் பிரித்தானியா, இலங்கைக்கு உதவும் நோக்கிலேயே ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் புதிய பிரேரணையை சமர்ப்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையுடன் நீண்டகாலமாக நல்லுறவைப் பேணிவரும் நாடான பிரித்தானியா, இலங்கைக்கு உதவும் நோக்கிலேயே இந்தப் புதிய பிரேரணையை முன்மொழிந்திருப்பதாகவும் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கு உதவுவது அந்த நோக்கங்களில் ஒன்று என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த பிரேரணையை நிராகரிப்பதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.






Post a Comment

Recent News

Recent Posts Widget