யாழ்.மாவட்டத்தில் தீவகம், கோப்பாய், கொடிகாமம், உடுத்துறை ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களிலும், வல்வெட்டித்துறை தீருவில் திடல், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் விசுவமடு, முழங்காவில் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்திலும் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும், தாண்டியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பகுதியிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடியாறு துயிலுமில்லத்திலும், திருகோணமலையில் ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ் தேசத்தின் விடுதலைக்கான தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூர்ந்து, தமிழ் மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் இன்று உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
மாலை 6:05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு சமநேரத்தில் நினைவுச்சுடர்களும் ஏற்றப்பட்டு துயிலுமில்லங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Post a Comment