Ads (728x90)

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு கிடையாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என அவர் எதனடிப்படையில் சுற்றறிக்கை வெளியிட்டார் என்பது தொடர்பில் அவரிடம் விளக்கம் கோரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மறு அறிவித்தல் விடுக்கும் வரை கட்டுப்பணத்தை பொறுப்பேற்றும் பணிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அரச நிர்வாகம்,உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் 10 ஆம் திகதி காலை சகல மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த சுற்றறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சகல மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தெளிவுப்படுத்தல் அறிவுறுத்தலை அனுப்பி வைத்துள்ளது. 

கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுத்தாக்கல் ஆகியவற்றை பொறுப்பேற்றல் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களின் பொறுப்பாகும் என இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் அந்த சுற்றறிக்கையை மீளப் பெற்றுக் கொண்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget