இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்புடைய அதிகாரிகள் பொறுப்புக்கூறச் செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளுக்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிடுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்தும், முறையற்ற நிர்வாகம் மற்றும் அடக்குமுறைகள் போன்றவற்றுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியும் கொழும்பு-மருதானை எல்பின்ஸ்ட் அரங்குக்கு முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை சத்தியாக்கிரகப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேளையில் அவ்விடத்திற்கு வருகைதந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம் நடாத்தியதுடன் இதன்போது 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்கள் கொண்டிருக்கும் உரிமைக்கு முற்றிலும் முரணான வகையில் இலங்கை பொலிஸாரால் சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ளமன்னிப்புச்சபை, இது முதன்முறையல்ல என்றும் தெரிவித்துள்ளது.
நாம் பார்வையிட்ட காணொளியின் பிரகாரம், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
அதுமாத்திரமன்றி கைது நடவடிக்கையின்போது தடியடிப்பிரயோகம் நடாத்தப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது என்று குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, கைதுசெய்யப்பட்டவர்களைப் பார்வையிடுவதற்கு சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் தீவிர கரிசனையைத் தோற்றுவித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Post a Comment