Ads (728x90)

இந்தியா -இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் வாண்டர்சேயின் அபார பந்துவீச்சினால் இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் மற்றும் அவிஷ்கா தலா 40 ஓட்டங்கள் எடுத்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், குல்தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 241 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட மறுமுனையில் சுப்மன் கில் நிதான ஆட்டத்தால் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட் இணைப்பிற்கு 97 ஊட்டங்கள் எடுத்த நிலையில் அதிரடியாக விளையாடிய ரோகித் 64 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சுப்மன் கில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய கோலி 14 ரன்களிலும், ஷிவம் துபே மற்றும் கே.எல். ராகுல் டக் அவுட்டிலும், ஐயர் 7 ரன்களிலும் வாண்டர்சே சுழலில் சிக்கி ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் டாப் ஆர்டரை மொத்தமாக வீழ்த்திய வாண்டர்சே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் அக்சர் படேல் தனி ஆளாக போராடி அவரும் 44 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி கனவு முடிவுக்கு வந்தது. 

முடிவில் வெறும் 42.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா 208 ஓட்டங்களில் சகல விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 32 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டி சமனில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget