Ads (728x90)

பொதுமக்களின் அபிலாஷைகள் மிகவும் தீவிரமடைந்திருக்கும் நேரத்தில் அந்த அபிலாஷைகளை நிறைவேற்ற பாராளுமன்ற முறைமையைப் பிரயோகிப்பது மிகவும் முக்கியமானது என சபாநாயகர் அசோக ரன்வல புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்தார். 

பத்தாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே சபாநயாகர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் மிகவும் பலமான பாராளுமன்றத்தைத் தெரிவு செய்திருக்கும் சூழ்நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றுவதே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பிரதான எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும் என இச்செயலமர்வில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் தொடர்பில் மக்களின் அபிப்பிராயத்தை மாற்றும் செயற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய அர்ப்பணிப்புடன் பணியாற்ற இந்தச் செயலமர்வு உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இம்முறை அமையப்பெற்ற பாராளுமன்றம் இந்த நாட்டின் வரலாற்றில் தனித்துவமிக்க பாராளுமன்றம் எனவும், பெண்களின் அதிகூடிய பிரதிநிதித்துவமான 22 பெண் உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றமாக அமைவது சாதகமான முன்னேற்றம் எனவும் அவர் தெரிவித்தார்.

திறந்த பாராளுமன்றம் என்ற கருத்தை வலுப்படுத்துவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பை பிரஜைகளுக்கு நெருக்கமாக கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் பாராளுமன்ற முறைமை மற்றும் அதன் மரபுகள் தொடர்பில் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 162 பேர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது பத்தாவது பாராளுமன்றத்தின் தனிச்சிறப்பு என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

பாராளுமன்ற முறைமைகள் தொடர்பில் சிறந்த அறிவும் அனுபவமும் கொண்ட அதிகாரிகளின் வளப்பங்களிப்பின் ஊடாக நடத்தப்படும் இச்செயலமர்வை அனைத்து உறுப்பினர்களும் சிறப்பாக பயன்படுத்துவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செயலமர்வின் முதலாவது நாளான இன்று 168 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget