Ads (728x90)

தமிழ் மக்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தினை தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற அயலகத்தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக நாங்கள் என்ன கருதுகின்றோம் என்பதை விடவும் தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தான் முக்கியமான விடயமாகும்.

தமிழ் மக்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்றார்கள் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது. அதனடிப்படையில் தான் நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உள்ளீர்த்திருந்தோம். 

அதுமட்டுமன்றி, 13ஆவது திருத்தச்சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பிலும் காணப்படுகின்றது.

அந்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தவுள்ளதோடு அதனையடுத்து இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்கும் விடயமாக 13ஆவது திருத்தச்சட்டத்தினையும், மாகாண சபை முறைமையும் கருதுகின்றபோது அதனை அர்த்தபுஷ்டியான நிருவாகக் கட்டமைப்பாக செயற்படுத்திப் பார்ப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

ஆகவே 13ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் எமது நிலைப்பாட்டை விடவும் தமிழ் மக்களின் நிலைப்பாடே முக்கியமானது. அதேநேரம், தோழர் அநுரகுமார தலைமையிலான அரசாங்கமானது அனைத்து மக்களின் ஆணையுடனேயே ஆட்சிப்பொறுப்பினைப் பெற்றுள்ளது.

இதனால் அரசு அனைத்து மக்களுக்கான அரசாங்கமாகச் செயற்படவுள்ளதோடு, மக்கள் நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget