Ads (728x90)

புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டு கொல்லப்பட்டமையை அடுத்து கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் காவற்றுறை தடுப்புக்காவலில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதில் கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்கு துப்பாக்கியை கொண்டு வந்து கொடுத்த பெண் கொழும்பில் உள்ள ஒரு தங்குமிடத்தில் இருந்து வந்ததாக சஞ்சீவவைக் கொலை செய்த பிரதான சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

தனது வாக்குமூலத்தில் “தானும் குறித்த பெண்ணும் கொலையைச் செய்த பிறகு மருதானை பகுதிக்குச் சென்று முச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு பகுதிக்கு சென்றதாகவும், அதனையடுத்து தானும் அந்தப் பெண்ணும் தனித்தனியாக பயணம் செய்ததாகவும் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கொலைக்கு ஒன்றரைக் கோடி ரூபா ஒப்பந்தத் தொகையாக தருவதாக தனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் கொலை செய்வதற்கு முன்பு இரண்டு இலட்சம் ரூபாவை தான் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பிறகு தன்னை முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்று அடையாளம் காட்டிக் கொண்டாலும், அது அவரது உண்மையான பெயர் அல்ல என்று தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் பல அடையாள அட்டைகளை போலியாக தயாரித்துள்ளார். அதில் கொடிகாரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க என்ற பெயரைக் கொண்ட போலியான சட்டத்தரணி அடையாள அட்டையையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தி இந்தக் கொலை உட்பட மேலும் 6 கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே கொலைச் சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய மற்றுமொரு பெண்ணை கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் டுபாயில் தற்போது மறைந்திருக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான கெஹெல்பத்தர பத்மே எனப்படும் மண்டுனி பத்மசிறி பெரேராவால் திட்டமிடப்பட்டது என்பது முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget