Ads (728x90)

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு பிரச்சனையை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2017.12.31 வரை ஓய்வுபெற்ற அனைத்து ஓய்வூதியம் பெறுபவர்களும் ஒரே சம்பள அளவுத்திட்டத்தில் இருப்பதனால் 2020 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் கட்ட சம்பள அளவுத்திட்ட அடிப்படையில் 2016- 2020 வரை ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியங்களை மாத்திரம் திருத்துவதன் மூலம் ஓய்வூதிய முரண்பாடு ஒன்று தோற்றுவிக்கப்படும் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சனை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருப்பதனால் தற்போதுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அரசிறை ஏற்பாடுகளுக்குள் கட்டம் கட்டமான விதத்தில் இது தீர்க்கப்படும். 2020 ஜனவரி 01 இற்கு முன்னர் 3/2016 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக 2020 ஆம் ஆண்டுக்கு ஏற்புடைய சம்பள அளவுத்திட்டங்களுக்கு நேரொத்த விதத்தில் 3 கட்டங்களில் திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

முதலாவது கட்டமாக 2018 ஜனவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற அனைத்து ஓய்வூதியம் பெறுபவர்களினதும் ஓய்வூதியங்கள் 3/2016 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையில் 2018 ஆம் ஆண்டுக்கு ஏற்புடைய மூன்றாம் கட்ட சம்பள அளவுத் திட்டங்களுக்கு அமைவாக திருத்தம் செய்யப்படுவதுடன் 2025 யூலை மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

இக்கட்டத்திற்காக 2025 வரவு-செலவுத்திட்டத்தினூடாக ரூபா 10,000 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் சம்பள மாற்றத்தின் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டங்களுடன் தொடர்புடைய ஓய்வூதிய மாற்றங்களை முறையே 2026 யூலை, 2027 யூலை தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget