Ads (728x90)

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உலக தலைவர்கள் உச்சி மாநாட்டில் (WGS) கலந்து கொள்ள சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று முன்தினம் ஒரகல் (Oracle) நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

பொருளாதாரம் மற்றும் நிர்வாகச் செயற்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கையின் டிஜிட்டல் மாற்றம், பின்டெக் சேவை மற்றும் கிளவுட் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திகொள்ளல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்க ஒரகல் கிளவுட் உட்கட்டமைப்பிடம் (OCI), தரவு சுயாதீனத் தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கப்பாடுகளை உறுதிப்படுத்தி, அரசாங்க விண்ணப்பங்கள், இலத்திரனியல் நிர்வாக வசதிகள் மற்றும் தேசிய தரவு கட்டமைப்பு ஒன்றை ஸ்தாபிப்தற்கும் முன்வருமாறு ஜனாதிபதி ஒரகல் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார்.

பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் நகர்வை விரைவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் ஒரகல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியா ஆகியோர் பின்டெக் மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவு வசதிகளுக்கான ஆரம்பகட்ட முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடினர். 

இதற்காக கொழும்பு துறைமுக நகரத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கல் மையமொன்றை அமைக்குமாறு ஒரகல் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அது தெற்காசிய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் (Cloud Hub) மையமாக செயற்படும். அதற்கான குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புமாறு ஜனாதிபதி மைக் சிசிலியாவிடம் கோரிக்கை விடுத்தார்.

பிராந்திய அடிப்படையிலான டிஜிட்டல் மாற்றம் மற்றும் புத்தாக்கத்துக்கான ஒரகல் நிறுவனத்தின் நோக்குக்கு அமைய அதன் தெற்காசிய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் (Cloud Hub) மையமொன்றை கொழும்பு துறைமுக நகரில் அமைப்பதற்கு ஒரகல் நிறுவனம் ஆர்வமாக உள்ளதாக அந்த நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் தெரிவித்தார். 

இது ஒரு மூலோபாய நடவடிக்கை என்ற வகையில் செயற்கை நுண்ணறிவின் ஊடாக செயற்படுத்தப்படும் கிளவுட் வசதிகளில் இலங்கையை பிராந்தியத்தின் முன்னோடியாக மாறுவதற்கு உதவும். அதேபோல் அரச, தனியார் கூட்டு முயற்சிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப முதலீடுகளுக்கும் அடித்தளமாக அமையும்.

இந்தக் கலந்துரையாடலில் நிர்வாக வினைத்திறன், பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலகளாவிய போட்டித் தன்மைக்காக பயன்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையின் டிஜிட்டல் பரிணாம செயன்முறையில் முக்கிய பங்கை வகிக்க முன்வருமாறும் ஒரகல் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget