யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் ஆட்சி அமைப்பதில் தமிழ் கட்சிகளிடையே இழுபறி நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே தொடர்ச்சியாக நடைபெற்ற சந்திப்புக்களை தொடர்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு 12 ஆசனங்களும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றன. அதேவேளை இலங்கை தமிழரசு கட்சிக்கு 13 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைந்து செயற்படும் பட்சத்தில் யாழ். மாநகர சபையில் மொத்தமாக 16 ஆசனங்களுடன் மேயர் தெரிவில் முன்னிலை வகிக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ந.சிறீகாந்தா, பொ.ஐங்கரநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன், க.நாவலன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், நாகலிங்கம் இரட்ணலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Post a Comment