Ads (728x90)

உள்ளூர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணத்தினை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை பரீட்ச்சார்த்த சேவையாக மேற்கொண்டுள்ளது.

குறித்த விமானமானது நேற்று பி.ப 1.05 மணியளவில் கொழும்பிலிருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

2 வருடங்களின் பின்னர் கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பிக்கப்படுகிறது என இலங்கை விமான சேவைகள் அதிகார சபை தலைமை அதிகாரி தமிந்த றம்புக்வெல தெரிவித்தார். எமது நோக்கம் இலங்கைக்குள் உள்நாட்டு விமான சேவைகளை வளர்ப்பதாகும்.

இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிப்பதற்கான கட்டுமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பூர்த்தி செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது. டேவிட் பிரிஸ் விமான சேவைகள் நிறுவனம் தமது சேவைக்கான கோரிக்கையை விண்ணப்பிக்கும் பட்சத்தில் நாங்கள் அதனை அனுமதிப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

இருவழி கட்டணமாக ரூபா 68,000 அறவிடப்படும். 7 கிலோ பயணிகள் பொதி அனுமதிக்கப்படும். இதேவேளை 11 பயணிகள் இந்த சேவையின் மூலம் பயணம் செய்ய முடியும். பயண நேரமானது ஒரு வழிக்கு 1 மணித்தியாலம் 10 நிமிடம் தேவைப்படும் என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget