Ads (728x90)

1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி என்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ கோப்ரல் உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் ஏகமனதாக தள்ளுபடி செய்துள்ளது. 

தங்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றப்படாமையினால் தங்களுக்கு மன்னிப்பு வழங்கி, வழங்கப்பட்டுள்ள தண்டனையை 20 வருடங்களாகக் குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிடுமாறு கோரி பிரதிவாதிகள் குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு குமுதினி விக்ரமசிங்க, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது. 

இந்த மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி மன்றாடியர் நாயகம் லக்மாலி கருணாநாயக்க தமது அடிப்படை எதிர்ப்பை முன்வைத்தார்.

உரிய சட்ட காலம் நிறைவடைந்த பின்னர் மனுதாரர்கள் இவ்வாறான மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும், அவர்களின் மனுவை மன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் சிரேஷ்ட பிரதி மன்றாடியர் நாயகம் தெரிவித்தார். 

அத்துடன் அரசியலமைப்பின்படி நீதிமன்றால் தண்டனை வழங்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குவது ஜனாதிபதியின் முழுமையான உரிமை என்றும், அத்தகைய மன்னிப்பைக் கோருவதற்கு மனுதாரர்களுக்கு எவ்வித சட்டரீதியான உரிமையும் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார். 

சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் ஆயம் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிப்பதாக அறிவித்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget