எனவே சஜித் பிரேமதாசவும், நாமல் ராஜபக்ஷவும் அவர்களது கட்சிகளைப் பாதுகாத்துக் கொள்வதில் அவதானம் செலுத்துவதே பொருத்தமானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் முற்போக்கானவர்களை இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்க சஜித் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். இவை சில ஊடகங்களால் உருவாக்கப்படும் செய்திகளாகும். ஆனால் அவ்வாறு எந்த சூழலும் அரசாங்கத்தில் இல்லை.
நீங்கள் உங்கள் கட்சிகளைப் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் பிளவுபடுவோம் எனப் பார்த்துக் கொண்டிருப்பதால் பிரயோசனம் இல்லை என்று சஜித்திடமும், நாமலிடமும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதற்கு முன்னரும் ஜே.வி.பி., என்.பி.பிக்கு இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. லால் காந்த அரசாங்கத்திலிருந்து விலகுவார் எனக் கூறினர். இவ்வாறான வதந்திகள் இரு நாட்கள் மாத்திரமே பெரிதாகப் பேசப்படும். ஆனால் அவற்றால் எவ்வித பிரயோசனமும் இல்லை.
நாம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதோடு, அரசியல் கலாசாரத்தை மாற்றுவோம். அவற்றை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம். அவர்களது பொய்களுக்கு பதிலளிப்பது பிரயோசனமற்றது. ஆளுந்தரப்பிலுள்ள 159 உறுப்பினர்களும் முற்போக்கானவர்களே எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment