Ads (728x90)

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்திலும் இந்நாட்டு வர்த்தக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் நேற்று இரவு முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அனைத்து தரப்பினருடனும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம், அந்த நன்மைகளை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், செயற்திறனுடனும் வழங்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த கடினமான நிலைமையில் மக்களுக்காக முன்வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் நன்கு ஒருங்கிணைந்து பணியாற்றி, மனசாட்சிப்படி எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய அர்ப்ணிப்புடன் செயற்படுவோம் என்று அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

மேலும், எந்தவித பாகுபாடும் இன்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான வசதிகளை வழங்கி அவர்களின் உயிர்களுக்கு மதிப்பு கொடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த கடினமான நிலைமை, நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முப்படைகளின் ஆதரவுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், இடம்பெயர்ந்தவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல், மீண்டும் இயல்பு வாழ்வை மீட்டெடுத்தல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை அனைவரின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி, ஒரு தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமது அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் செயற்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து கலந்து கொண்ட பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். மேலும் தமது பங்களிப்புகளைப் பாராட்டி இந்தக் கலந்துரையாடலுக்கு அழைத்ததற்காக அவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

தற்போதைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஊழல் மற்றும் மோசடி  அற்ற வேலைத்திட்டத்தின் காரணமாக, அரசாங்கத்துடன் அச்சமின்றி பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget