தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகள் பற்றி ஆய்வு நடத்தியது. இதில் 29 நகரங்களில் எதிர்காலத்தில் நிலநடுக்க அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ள பகுதிகளை பிரிவு 4 என்றும் மிக அதிகம் உள்ள பகுதிகளை பிரிவு 5 என்றும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வகைப்படுத்தி உள்ளது.
டெல்லி, பீகார் மாநிலம் பாட்னா, ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர், நாகாலாந்து மாநிலம் பொஹிமா, புதுச்சேரி, அசாம் மாநிலம் கவுகாத்தி, சிக்கிம் மாநிலம் காங்டாக், இமாசல பிரதேச மாநிலம் சிம்லா, உத்தர காண்ட் மாநிலம் டேராடூன், மணிப்பூர் மாநிலம் இம்பால், சண்டிகர் ஆகிய நகரங்களில் நிலநடுக்க அபாயம் உள்ளன. இவை பிரிவு 4 மற்றும் பிரிவு 5-ன் கீழ் வருகின்றன.
இமயமலையும் அது சார்ந்த பகுதிகளும் உலகிலேயே நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடமாக ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளவையாக கருதப்படும் நகரங்களில் பெரும்பாலானவை இமயமலை அருகே அமைந்துள்ள இடங்கள் ஆகும்.
இந்த நகரங்களில் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். எனவே நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர்ச்சேதமும் அதிகரிக்கும்.
ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத்தின் கட்ச் பகுதி, பீகாரின் வடக்கு பகுதி, அந்தமான் நிகோபார் ஆகியவை நிலநடுக்க ஆபத்து மிக அதிகம் உள்ள 5-வது பிரிவின் கீழ் வந்துள்ளது.
டெல்லி, ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதி, சிக்கிம் ஆகியவை நிலநடுக்க ஆபத்து அதிகம் உள்ள 4-வது பிரிவின் கீழ் வருகின்றன. சண்டிகர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஆகிய நகரங்களுக்கும் நிலநடுக்கம் ஆபத்து உள்ளது.

Post a Comment