குறிகாட்டுவான்-நயினாதீவு இடையே படகுச் சேவைகளில் ஈடுபடும் தனியார் படகுகள் அனைத்தும் இன்று புதன்கிழமை சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தினர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
குறிகாட்டுவானிலிருந்து நயினாதீவுக்கான படகுச் சேவையில் ஈடுபடும் அனைத்துப் படகுகளும் உரிமையாளர்களும் இன்று தொடக்கம் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம்.
பல வருடங்களாக நாம் பொதுமக்களுக்கான படகுச் சேவைகளை வழங்கி வருகிறோம். திடீரென யாருடைய அனுமதிகளையும் பெறாமல் தென்னிலங்கையைச் சேர்ந்த சிலர் படகுடன் வந்து பொதுமக்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.
எனவே தென்னிலங்கையினரின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டினைக் கண்டித்தும் அவர்களுக்கான படகுச் சேவையை உடனடியாக நிறுத்து மாறும்கோரி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் – என்றுள்ளது.
குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவு நோக்கி படகு சேவையில் ஈடுபட அண்மையில் எவருக்கும் எவ்வித அனுமதிகளையும் நாம் வழங்கவில்லை. அது தொடர்பில் ஆராய்வதாக வேலணைப் பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment