
டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய, பும்ரா, குல்தீப் அபாரப் பந்து வீச்சினால் ஆஸ்திரேலியா 18.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் இன்னிங்ஸ் இத்துடன் முடிவடைந்தது.
மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 6 ஓவர்களில் 48 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. இதனை இந்திய அணி ரோஹித் சர்மா (11) விக்கெட்டை இழந்து 5.3 ஓவர்களில் எடுத்து வெற்றி பெற்றது. ஷிகர் தவண் 15 ரன்கள், விராட் கோலி 22 ரன்கள் ஆட்டமிழக்காமல் கொண்டு சென்றனர். ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
மழையால் பாதிக்கப்படும் டி20 போட்டிகள் பெரும்பாலும் இலக்கைத் துரத்தும் அணிகளுக்கே சாதகமாக அமையும். 20 ஓவர்கள் நடத்த முடிந்தால் நடத்த வேண்டும் இல்லையேல் கைவிட வேண்டும், 5 ஓவர்கள், 2 ஓவர்கள் போட்டியிலெல்லாம் ஒரு வெற்றியைப் பெற்று அது தொடரை முடிவு செய்யும்படியாக அமைவது நல்லதல்ல.
டேவிட் வார்னர் தலைமை ஆஸ்திரேலிய அணிக்கு ஒரே சமாதானம் ஏரோன் பிஞ்ச் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 30 பந்துகளில் 42 ரன்கள் விளாசியதே. ஆனால் அவரையும் குல்தீப் யாதவ் அருமையாக பொறி வைத்துப் பிடித்தார். பிஞ்ச் முன் கூட்டியே தீர்மானித்த ஸ்விப் ஷாட்டை ஆட விடாமல் ஒரு பந்தை குல்தீப் நேராக, வேகமாக ஸ்டம்பில் வீசினார் அவரால் அட்ஜஸ்ட் செய்ய முடியவில்லை, பவுல்டு ஆனார், மிக அருமையாக யோசித்து எடுத்த விக்கெட்.
முன்னதாக வார்னர் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்களில் இருந்த போது முதல் ஓவரிலேயே புவனேஷ் குமார் பந்தை ஸ்டம்பில் வாங்கி விட்டுக் கொண்டார்.
பிறகு கிளென் மேக்ஸ்வெல், ஏரோன் பிஞ்சுடன் இணைய இருவரும் 2-வது விக்கெட்டுக்காக 47 ரன்களைச் சேர்த்தனர். மேக்ஸ்வெல் 17 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் வீசிய மிக மிகச் சாதாரணமான ஷார்ட் பிட்ச் பந்தை, எங்கு வேண்டுமானாலும் அடிக்க வேண்டிய பந்தை ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மேக்ஸ்வெல் தொடர்ந்து சாஹலிடம் அவுட் ஆகி அவரது செல்லப்பிள்ளையாகி வருகிறார். 10-வது ஓவரில் குல்தீப் யாதவ், ஏரோன் பிஞ்சை அருமையாக பெவிலியன் அனுப்ப 76/3 என்ற நிலையிலிருந்து ஆஸ்திரேலியா மீண்டும் சரிவு கண்டு 42 ரன்களில் மேலும் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஹெட், ஹென்றிக்ஸ், டேனியல் கிறிஸ்டியன் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
18வது ஓவரில் டிம் பெய்ன், கூல்ட்டர் நைல் ஆகியோரது விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினார். பெய்ன் லேசான இன்ஸ்விங்கரிலும், கூல்ட்டர் நைல் அற்புதமான யார்க்கரிலும் பவுல்டு ஆகினர் ஆஸ்திரேலியா 113/7 என்று ஆனது. டேனியல் கிறிஸ்டியன் ரன் அவுட் ஆக 18.4 ஒவர்களில் 118/8 என்று இருந்த போது மழை குறுக்கிட்டது.
இலக்கை இந்திய அணி துரத்திய போது பெஹண்ட்ராப் வீசிய முதல் பந்தையே ரோஹித் சர்மா மிக அருமையாக சற்றே தாமதமாக இன்ஸ்விங்கரை ஆடி மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்தார், மிக அழகான ஷாட். ஆனால் அறிமுக வீரர் பெஹண்ட்ராப் அந்த ஓவரை அருமையாக வீசினார் ஷிகர் தவணை பீட்டன் செய்தார். கூல்டர் நைல் அடுத்த ஓவரை வீசிய போது ரோஹித் சர்மா லாங் லெக்கில் அவரை சிக்ஸ் அடித்தார். ஆனால் அடுத்த நேர் பந்தை பிளிக் செய்ய முயன்று பந்தைக் கோட்டை விட பவுல்டு ஆனார். பிறகு ஷிகர் தவனுக்கு தன் பந்தில் தன்னிடமே வந்த கேட்சை கூல்ட்டர் நைல் விட்டார்.
கோலி இறங்கி வேகம் குறைத்து வீசப்பட்ட பந்தை தூக்கி பவுண்டரிக்கு அடித்தார். பிறகு ஸாம்ப்பாவை அருமையான டைமிங்கில் மிட்விக்கெட்டில் ஒரு பவுண்டரி அடித்தார். 6-வது ஓவரில் 6 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் கோலி அடித்த ஷாட்டை பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் கூல்டர் நைல் அருமையாக பீல்ட் செய்ய நிச்சய பவுண்டரி 2 ரன்கள் ஆனது. பிறகு கிறிஸ்டியன் வீசிய 3-வது பந்தை எக்ஸ்ட்ரா கவரில் கோலி தூக்கி அடிதத போது இந்திய அணி வெற்றி இலக்கை கடந்தது.
Post a Comment