தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து முறையற்ற விதத்தில் கடன்களைப் பெற்றுக் கொண்டதன் காரணமாக அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள கிராம மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான நாடளாவிய செயற்றிட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வறுமையை இல்லாதொழிக்கும் கிராம சக்தி மக்கள் இயக்கத்தை மக்கள் மயப்படுத்தும் தேசிய நிகழ்வு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அரச தலைவர் இவ்வாறு தெரிவித்தார் என அரச தலைவர் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில் உள்ளதாவது:-
இந்தத் திட்டத்துக்கான ஆலோசனை 2018ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டப் பிரேரணையில் முன்வைக்கப்படும். செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்குவதற்கு வளங்களைப் பெற்றுக் கொடுக்கும் கொள்கையில் இருந்து விலகிப் பொருளாதாரப் பிரச்சினைகள் உடைய மக்களை அதிலிருந்து மீட்டு அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான வசதிகளையும், வரப்பிரசாதங்களையும் வழங்குதல் அரசின் பொறுப்பாகும்.
அரசியல் ரீதியில் ஒருவருக்கு ஒருவர் குறை கூறுவதை விடுத்து வறுமையில் இருந்து விடுபடுவதற்கு கடந்த பல வருட காலமாக அனைத்து அரசுகளிலும் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்களை அனுபவமாகக் கொண்டு கிராம சக்தி மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது அனைவரின் கடமையாகும்.
இந்தச் செயற்றிட்டத்தில் அனைத்து மாவட்ட செயலர்களும், பிரதேச செயலர்களும் நிர்வாகத்தை நெறிப்படுத்துபவர்களாக அன்றி அதனுடன் இணைந்த அபிவிருந்தியை நெறிப்படுத்துபவர்களாகச் செயற்பட வேண்டும் என்று அரச தலைவர் குறிப்பிட்டார். – என்றுள்ளது.
Post a Comment