
இவ்வாறு வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்தார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செயலமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரச தலைவர் தேர்தலின் போது புலம்பெயர் சமூகத்தினர் பெரும்பாலானோர் எமக்கு ஆதரவளித்தனர். புலம்பெயர் சமூகத்தினர் அனைவரும் பிரிவினைவாதிகள் அல்லர். ஒருசிலர் மாத்திரமே தனிநாடு வேண்டும் எனக் கூச்சலிடுகின்றனர்.
பெரும்பாலானவர்களின் விருப்பம் ஒற்றையாட்சிக்குள் அதிகூடிய அதிகாரப்பகிர்வு முறையாகவே இருக்கின்றது. புதிய அரசமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது காலத்துக்கேற்ற வகையிலும், நடுநிலைமையாகவும் செயற்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்குப் பிரச்சினை உள்ளதென உணர்ந்துகொண்ட கடந்த அரசுகள், அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை. மக்கள் போராட்டத்தைக் கையிலெடுத்தனர்.
தற்போது இந்த மக்களின் பிரச்சினை மாத்திரமன்றி, மனித உரிமைகளை வலுப்படுத்தி, நீதித்துறையை சுயாதீனப்படுத்தி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாதையில் நாம் பயணிக்கின்றோம். இன்று சில சிங்களப் பிரிவினைவாதிகளின் செயற்பாடு மிகவும் கேவலமாக உள்ளது. நாட்டைப் பிரிப்பதாகக் கூறி நாட்டில் மதவாதத்தை ஏற்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர்.
நாடு பிரிக்கப்படமாட்டாது என்ற விடயம் புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கையில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒற்றையாட்சியில் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்படும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சி என்ற சொல்லுக்கு வடக்கு, கிழக்கு மக்கள் பயப்படுகின்றனர். கடந்த காலங்களில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள், இடது கையால் வழங்கப்பட்டு வலது கையால் மீளப் பெறப்பட்டன. அந்த மக்கள் இதனால் இப்போதும் பயப்படுகின்றனர்.
தற்போது ஒருமித்த நாடு என்ற பதத்தை உள்வாங்கியுள்ளோம். அதனைவிட ஒரு சிறந்த பதம் இருக்குமாயின் நாம் ஏற்றுக்கொள்ளத் தயார்.
சகல மதங்களுக்கும் உரிய மதிப்பு வழங்கப்படவேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பௌத்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை இல்லாமல் போய்விடவில்லை என்பதை சிங்களவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வடக்கு – கிழக்கு இணைப்பு நடைபெறாவிட்டால் புதிய அரசமைப்பை ஏற்கமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கும் கூறவில்லை. வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு, அது அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு.
வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட மூன்று விடயங்களில் இதுவும் ஒன்று. வடக்கு, கிழக்கு மட்டுமன்றி எந்தவொரு மாகாணமும் இணைக்கப்படக்கூடாது. அவற்றுக்கு மேலதிகமாக மூன்றாவதாக மிக முக்கிய விடயமொன்றை உள்ளடக்கியுள்ளோம்.
வடக்கு, கிழக்கு இணைக்கப்படவேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படவேண்டும். அத்தோடு, சம்பந்தப்பட்ட இரண்டு மாகாண மக்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – என்றார்.
Post a Comment