Ads (728x90)

இரட்டை குடியுரிமையுடன் தேர்தலில் போட்டியிட்ட ஆஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபை ஜாய்ஸ் மற்றும் 4 செனட் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் 116 ஆண்டு கால அரசியலமைப்பு விதிமுறையின்படி, இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது.

ஆனால், தற்போது பிரதமர் மார்கல் டர்ன்புல் தலைமையிலான ஆளும் பழமைவாத கட்சியில் பல செனட் உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமையுடன் கடந்த தேர்தலில் போட்டியிட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வழக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில், இரட்டை குடியுரிமையுடன் போட்டியிட்டதால், துணை பிரதமர் பர்னபை ஜாய்ஸ் மற்றும் 4 செனட் உறுப்பினர்கள் வெற்றி பெற்றது செல்லாது என அவர்களை தகுதி நீக்கம் செய்து நீதிபதி நேற்று அதிரடி தீர்ப்பளித்தார். பர்னபை ஜாய்ஸ் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் குடியுரிமையை பெற்றவர்.

அவரது தந்தை நியூசிலாந்தை சேர்ந்தவர். தனக்கு தனது தந்தை நியூசிலாந்து குடியுரிமை பெற்றிருப்பதே தெரியாது என ஜாய்ஸ் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் நியூசிலாந்து குடியுரிமையை திருப்பி அளித்து விட்டார். இதனால், அவர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடலாம். இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஜாய்ஸ் கூறுகையில், ‘‘நீதிமன்ற தீர்ப்புக்காக கவலைப்படவில்லை. மீண்டும் இடைத்தேர்தலில் வென்று மக்கள் பணிக்கு திரும்புவேன்’’ என நம்பிக்கையுடன் கூறியுள்ளார். ஏற்கனவே ஆளும் பழமைவாத கட்சி 150 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 76 இடங்களை மட்டுமே கொண்டிருக்கிறது.

ஜாய்ஸ் பதவி நீக்கத்தால் அக்கட்சிக்கு ஆட்சியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனவும், மீண்டும் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இது டர்ன்புல் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget