Ads (728x90)

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக தொடர்ந்து 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த 5 ஆண்டுக்கான அதிபராக நேற்று முதல் செயல்பட தொடங்கினார். போருக்கு முழு அளவில் தயாராக இருக்கும்படி ராணுவத்துக்கு அவர் உத்தரவிட்டார். சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக 2வது முறையாக அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.

அதோடு சீன ராணுவத்துக்கும் தலைவராக விளங்குகிறார். இதன்மூலம், கட்சியில் மட்டுமின்றி ஆட்சியிலும் தனது ஆதிக்கத்தை ஜின்பிங் நிலைநாட்டி இருக்கிறார். உலக நாடுகள் அனைத்திலும் அரசின் கட்டுப்பாட்டில்தான் ராணுவம் உள்ளது. ஆனால், சீனாவில் மட்டும் அது தலைகீழ். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் ராணுவம் உள்ளது.

ஊழலுக்கு எதிரான இவருடைய நடவடிக்கையில் 10 லட்சம் அரசு ஊழியர்கள் தண்டிக்கப்பட்டனர். இதன்மூலம், சீன மக்களிடம் ஜின்பிங்கின் செல்வாக்கு அதிகரித்த காரணத்தால்தான், ஆளும் கட்சியின் தலைவராக 2வது முறையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சியை வழி நடத்த, 7 தலைவர்கள் கொண்ட நிலைக்குழு உள்ளது. இந்த  உறுப்பினர்கள் எண்ணிக்கையை 5 ஆக குறைக்க ஜின்பிங் முயற்சித்தார். ஆனால், முன்னாள் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தனது முயற்சியில் ஜின்பிங் தோல்வி அடைந்தார். இந்நிலையில், கட்சியின் தலைவராக 2வது முறையாக தேர்வு செய்யப்பட்ட அவர், தானாகவே அதிபர் பதவியையும் 2வது முறையாக வகிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதன்படி, அடுத்த 5 ஆண்டுக்கான அதிபர் பதவி பணியை நேற்று முன்தினம் அவர் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, மத்திய ராணுவ ஆணையத்தின் கூட்டத்தையும், ராணுவ அதிகாரிகள் கூட்டத்தையும் அவர் கூட்டினார். ஜின்பிங்குக்கு எதிரான 2 மூத்த ராணுவ தளபதிகள் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் பேசிய அதிபர் ஜின்பிங், ‘‘ராணுவம் முழுமையாக கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

போருக்கு தயார்நிலையில் இருப்பதோடு, போரில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வகுத்து வைக்க வேண்டும். பாதுகாப்புத் துறையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். மக்கள் விடுதலை ராணுவத்தின் எதிர்கால மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். 21ம் நூற்றாண்டின் உலகின் மிகச்சிறந்த முன்னணி ராணுவம் என்ற பெருமையை சீனா பெற வேண்டும்’’ என்றார்

Post a Comment

Recent News

Recent Posts Widget