Ads (728x90)

சீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான பிரிவில் நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் ருமேனிய வீராங்கனையான சிமோனா ஹாலெப், லாத்விய வீராங்கனையான ஜெலீனா ஒஸ்டபென்கோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் சிமோனா ஹாலெப். இந்த வெற்றியின் மூலம் கடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒஸ்டபென்கோவிடம் தோற்றதற்கு அவர் பழி தீர்த்தார்.

சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றதன் மூலம், பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் அவர் முதல் இடத்துக்கு முன்னேறினார். அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் இது முறையாக அறிவிக்கப்படும். இந்த பட்டியலில் இதுவரை ஸ்பெயினின் கார்பைன் முகுருசா முதல் இடத்தில் இருந்தார். 4 வார காலங்கள் மட்டுமே அவரால் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.

26 வயதான சிமோனா ஹாலெப், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வெல்லாமலேயே தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முதல் ருமேனிய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். கணினி மூலம் 1975-ம் ஆண்டு தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதலிடத்தை பிடிக்கும் 26-வது வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆவார். இந்த ஆண்டில் ஏஞ்சலிக் கெர்பர், செரீனா வில்லியம்ஸ், கரோலினா பிளிஸ்கோவா ஆகியோரும் முதலிடத்தை கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சானியா ஜோடி தோல்வி

சீன ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷூவாய் பெங் ஜோடி தோல்வியடைந்தது. சானியா ஜோடி, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், சீன தைபேவின் ஷான் யங் ஜன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சானியா ஜோடி 6-2, 1-6, 5-10 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

Post a Comment

Recent News

Recent Posts Widget