Ads (728x90)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அவர் வலிமையான அரசியல் தலைவராக உருவெடுக்க கூடும் என கருதப்படும் நிலையில், ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களின் அரசியல் விருப்பம் என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளரை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆளும் அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தார்.

திமுக வேட்பாளர் என்.மருது கணேஷ் 24,651 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார். நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளைவிட குறைவான வாக்குகளையே பாஜக பெற்றது. இந்த தேர்தல் வெற்றி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெரும் ஆளுமையுடைய தலைவராக விளங்கிய ஜெயலலிதா மறைந்ததாலும், திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியதாலும், ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள்? என்ற கேள்வி கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்பட்டு வருகிறது.

எம்ஜிஆரை போல மீண்டும் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் வரக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்றவகையில் இருவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமூக, அரசியல் பிரச்னைகள் தொடர்பாக நடிகர் கமல், தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்துக்கைள வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார். அதுபோலவே, நடிகர் ரஜினியும் தனது ஆதரவாளர்கள், ரசிகர்களுடன் அரசியலில் நுழைவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தான், தமிழக அரசியலில் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தையும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தையும் வீழ்த்திய சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய தினகரன் வெற்றி பெற்றுள்ளார். இருபெரும் அரசியல் கட்சிகளையும் தாண்டி சுயேச்சை வேட்பாளராக களம் கண்ட தினகரன் பெற்ற வெற்றி அவரது ஆளுமைக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. எனவே அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் போட்டியில் அவர் தீவிரம் காட்டக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறியதாவது:

”தமிழக அரசியலில் வெறுக்கப்பட்ட ஒருவர் சசிகலா. அவரது உறவினர் ஒருவர் தனக்கான இடத்தை செதுக்கிக் கொள்ள முடியும் போது இது சிந்திக்கத்தக்கதாகிறது. அனைத்து கடினங்களையும் கடந்து வந்துள்ளார் தினகரன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஒப்பிடும்போது தினகரன் ஒரு புத்துணர்வு முகம் கொடுக்கிறார்

‘தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை சினிமாவில் இருந்து மீண்டும் ஒருவர் வந்து நிரப்புவார் என்ற கருத்து ஏற்கத்தக்கதல்ல. எம்ஜிஆரின் பயணம் வேறானது. மறைந்த முதலமைச்சர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட்ட பிம்பம் எம்.ஜி.ஆர். அவர் திமுகவின் ஒரு அங்கமாக இருந்தவர். அரசியல் பயணத்தை தொடங்கி, அப்போதைய திமுகவின் முன்னணி தலைவராக விளங்கி, பின்பு, அதிமுகவை தொடங்கி வெற்றி கண்டவர் எம்ஜிஆர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் 2011 தேர்தலில் 29 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்கட்சித் தலைவரானார். ஆனால் மக்களை ஈர்க்கும் தலைவராக, பேச்சாளராக அவரால் உருவெடுக்க முடியவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியை தழுவினார். அதுபோல, சினிமா கவர்ச்சி தமிழக அரசியலில் தலைமை இடத்தில் அமர வைத்து விடாது.

அரசியல் தலைவர்களையும், அவர்களது செயல்பாடுகளை விமர்சிப்பதும் மட்டுமே நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு தகுதியாகிவிடாது. சினிமாவில் நடித்தபடி, பகுதி நேர அரசியல்வாதியாக சாதிக்க முடியாது. மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி களப்பணியாற்றினால் மட்டுமே அரசியலில் சாதிக்க முடியும்’’ எனக்கூறினார்.

இதுபோலேவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில் ‘‘ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் தினகரன் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் திராவிடக்கட்சிகளின் பயணம் தமிழகத்தில் மேலும் சில ஆண்டுகளுக்கு உறுதியாக தொடரும். தனக்கு எதிரான சூழலையும், சாதகமாக மாற்றிக்காட்டிய அவரது செயல்பாடுகளை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர். எனவே தற்போதைய சூழலில் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இருவரும், அரசியலுக்கு வரும் முன், ஒரு முறைக்கு இருமுறை யோசித்தே முடிவெடுப்பார்கள்’ எனக் கூறினார்

Post a Comment

Recent News

Recent Posts Widget