பிபிசி வானொலிக்கு கெஸ்ட் ஆசிரியராக இருந்து ஒபாமாவை நேர்காணல் செய்தார் இளவரசர் ஹாரி. அந்த நேர்காணலில் பராக் ஒபாமா சமூக வலைத்தளங்கள் சமுதாயத்தை பிளவு படுத்த அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் முறையைப் பார்த்தால் சமுதாயத்தை பிளவு படுத்துவதாக உள்ளது. நம்மைப் போன்ற தலைவர்கள், சமூக வலைத்தள வாசிகள் தங்கள் பாரபட்சமான, ஒருதலைபட்சமான, ஒற்றைக் கருத்தியல் சார்ந்த பார்வைகளி பாதுகாப்பாக தஞ்சமடைந்து கொண்டிருப்பதை அனுமதிக்கக் கூடாது.
“இணையதளம் என்பது அனைவருக்குமான பொதுவெளி என்பதை நம்மைப் போன்ற தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் இணையதளத்தின் பல அபாயங்களில் ஒன்று என்னவெனில் இவர்களுக்கு முற்றிலும் வேறு ஒரு உலகம் கிடைக்கிறது. தங்களது நடப்பு பாரபட்ச கருத்தியலுக்கு ஏற்ப, தங்களைக் குளிரச்செய்யும் கருத்துகளில் குளிர்காயத் தொடங்கியுள்ளனர். இது அபாயகரமானது.
அதாவது பலதரப்பட்ட பார்வைகளும் கருத்தியல்களும் வர வேண்டும், ஆனால் அந்த பலதரப்பட்ட பார்வைகள், கருத்தியல்கள் சமூகத்தைப் பிளவு படுத்தக் கூடாது. இவர்கள் உரையாடல் தொடுக்கும் ஆன் லைன் பிரச்சினைகள் பல எதார்த்தத்தில் இருப்பதில்லை, எனவே ஆன் லைன் மக்களை அதற்கு வெளியே கொண்டு வந்து பல விஷயங்களில் இவர்களின் பாரபட்சமான கருத்துகளுக்கு முரணாக மாற்றாகவே உலகம் இருக்கிறது என்பதைக் காட்டி அவர்களுக்கு உதவ வேண்டும். இணையதளத்தில் காண்பிக்கும் கொடூரமான முகங்களை இவர்களால் நிஜ உலகில் காட்ட முடியாது” என்று ஒபாமா பேசியுள்ளார். இந்த நேர்காணல் செப்டம்பரில் எடுக்கப்பட்டது.
இளவரசர் ஹாரியிடம் தனது திருமணத்துக்கு ஒபாமா குடும்பத்தை அழைப்பாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு “ஆச்சரியத்தை நான் முன் கூட்டியே கெடுக்க விரும்பவில்லை” என்றார்.
ஆனால் தி சன் நாளிதழிலோ, பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள், ட்ரம்புக்கு கோபம் ஏற்படுத்தும் வகையில் ஒபாமாவை அழைக்க வேண்டாம் என்று கருதுவதாகவும் இதனால் ஹாரி அழைக்க மாட்டார் என்றும் செய்தி வெளியிட்டது.
Post a Comment