Ads (728x90)


கர்நாடகாவில் டிவி சீரியலைப் பார்த்து, அதில் வரும் கதாபாத்திரத்தைப் போல தீ நடனம் ஆடிய 7 வயது சிறுமி, உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா டவுனைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சைத்ரா, மகள் பிரார்த்தனா (7). பிரார்த்தனா 2-ம் வகுப்பு படித்து வந்தாள். வீட்டில் டிவி.யில் ஒரு குறிப்பிட்ட கன்னட சீரியலை பார்ப்பது வழக்கம்.

இந்த சீரியலில் நடிகை ஒருவர் தன் கை, கால்களில் தீ வைத்து, தீப்பந்தம் ஏந்தி நடனமாடும் காட்சிகள் வந்தன. அதைப் பார்த்த பிரார்த்தனா, கடந்த 11-ம் தேதி, தானும் கையில் ஒரு பேப்பரை எடுத்து தீ வைத்துக்கொண்டு நடனமாடினாள். அப்போது பிரார்த்தனாவின் ஆடையில் தீப்பற்றிக் கொண்டது. வலி தாங்க முடியாமல் அலறினாள்.

அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சிறுமியின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்தனர். உடனடியாக தாவணகெரே அரசு மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு சென்றனர்.

கடந்த 15 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், பிரார்த்தனா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தாள். இதையடுத்து, சிறுமியின் தந்தை மஞ்சுநாத் அளித்த புகாரின்பேரில் ஹரிஹரா டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தாவணகெரே மாவட்ட நிர்வாகம், டிவி சீரியல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

பிரார்த்தனாவின் தந்தை மஞ்சுநாத் கூறுகையில், ‘‘குழந்தைகளை டிவி சீரியல் பார்ப்பதை தடுக்க வேண்டும். நான் என் மகளை கண்காணிக்கத் தவறிவிட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல் ஒரு சீரியலை பார்த்து நிறைய பேர் கட்டிடத்தின் மேல் இருந்து பறக்க முயற்சித்து கீழே விழுந்து இறந்தனர். இப்போது என் மகள் உடலில் தீ வைத்து நடனமாடி உயிரிழந்திருக்கிறாள். இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடராத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget