
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் வரும் 15-ம் தேதி மெல்பர்னில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இருந்து விலகுவதாக நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.
குழந்தை பிறந்து 4 மாதங்களே ஆன நிலையில், கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு தகுந்த அளவில் முழுமையாக தயாராகாததால் விலகுவதாக அவர், தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செரீனா வில்லியம்ஸ் மேலும் கூறுகையில், “ எனது பயிற்சியாளர் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் எப்போதும், அனைத்து வகையிலும் போட்டிக்கு முழுமையாக தயாராகி இருந்தால் மட்டும் செல்லுங்கள் எனக்கூறுவார்கள். என்னால் தொடரில் கலந்து கொள்ள முடியும். ஆனால் சம்பிரதாயத்துக்காக மட்டும் கலந்து கொள்ள விரும்பவில்லை. கடந்த முறை செய்ததை விட சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். அதற்கு எனக்கு சிறிது கால அவகாசம் தேவை” என்றார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் செரீனா வில்லியம்ஸ் தனது சதோரியான வீனஸ் வில்லியம்ஸை இறுதிப் போட்டியில் வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இது அவரது 23-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாக அமைந்திருந்தது. இதன் மூலம் ஓபன் ஏராவில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்த ஸ்டெபி கிராபின் சாதனையை செரீனா வில்லியம்ஸ் கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment