
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் கேப்டவுனின் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. காயம் குணமான நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின், விக்கெட் கீப்பர் டிகாக்குடன் முழு பலத்துடன் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது. டாஸ் வென்ற அந்த அணியின் கேப்டன் டுபிளஸ்சி பேட்டிகை தேர்வு செய்தார்.
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை புவனேஸ்வர் குமார் மிக சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். முதல் ஓவரிலேயே துவக்க வீரர் எல்கரை டக் அவுட்டாக்கினார். அதைத்தொடர்ந்து, மார்க்ராம் (5) விக்கெட்டை வீழ்த்திய புவனேஸ்வர், அனுபவ வீரர் அம்லாவையும் (3) வெளியேற்ற, தென் ஆப்ரிக்கா 12 ரன்னில் 3 விக்கெட் பறிகொடுத்து தடுமாற்றம் கண்டது. இக்கட்டான நிலையில் டிவில்லியர்ஸ், டுபிளஸ்சி ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரைசதம் அடித்து அணியை மீட்டனர்.
இந்த ஜோடி 114 ரன் சேர்த்த நிலையில், டிவில்லியர்ஸ் (65) பும்ரா வேகத்திலும், டுபிளஸ்சி (62) ஹர்திக் பாண்டிய பந்திலும் ஆட்டமிழந்தனர். ஆனாலும் தென் ஆப்ரிக்காவை விரைவில் சுருட்டலாம் என்ற இந்திய பந்துவீச்சாளர்களின் எதிர்பார்ப்பு ஈடேறவில்லை. டிகாக் (43), பிளிண்டர் (23) ஓரளவுக்கு தாக்குபிடித்து ஆடினர். சிறப்பாக ஆடிய பந்துவீச்சாளர் மகராஜ் 35 ரன் எடுத்து துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் ரபாடா (26), மோர்கல் (2) விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றினார். இதன் மூலம் தென் ஆப்ரிக்காவின் முதல் இன்னிங்ஸ் 286 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார் 4, அஷ்வின் 2, முகமது ஷமி, பும்ரா, ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தென் ஆப்ரிக்க வேகங்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தனர். முரளி விஜய் (1) பிளிண்டர் பந்திலும், தவான் (16) ஸ்டெயின் வேகத்திலும், கேப்டன் கோஹ்லி (5) மோர்க்கல் பந்திலும் ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 11 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன்னுடன் தடுமாற்றத்துடன் உள்ளது. புஜாரா 5, ரோகித் ஷர்மா ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
Post a Comment