சிரியாவின் குர்து பகுதி மீது துருக்கி ராணுவம் தாக்குதல் தொடுத்துள்ளது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித் துள்ளது.சிரியாவின் வடக்குப் பகுதி குர்து இன மக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் பாதுகாப்பு குழுக்கள் (ஒய்.பி.ஜி) என்ற பெயரில் செயல்படும் குர்து ராணுவத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
துருக்கி நாட்டின் கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அங்கு செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு சிரியாவின் ஒய்.பி.ஜி. ராணுவம் ஆதரவு அளிப்பதாக துருக்கி அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்தப் பின்னணியில் சிரியா வின் வடக்குப் பகுதி மீது துருக்கி ராணுவம் நேற்று முன்தினம் தாக்குதல் தொடுத்தது. குர்து பகுதிக்குள் முன்னேறி தரை, வான்வழியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
துருக்கியின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெறும் போரில் ஒய்.பி.ஜி.யும் இணைந்து பணியாற்றி வருகிறது. அந்த படையை குறிவைத்து துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்துவது தீவிரவாதத்துக்கு எதிரான போரை பலவீனப்படுத்தும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக 2016 ஜூலையில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. எனினும் அதிபரின் ஆதரவாளர்கள் புரட்சியை முறியடித்தனர்.
இந்த ராணுவ புரட்சிக்கு அமெரிக்கா மறைமுகமாக ஆதரவு அளித்ததாக துருக்கி குற்றம் சாட்டியது. அப்போது முதலே அமெரிக்கா- துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. தற்போது அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி சிரியா மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.
Post a Comment