ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலிலுள்ள ஒரு இராணுவ பயிற்சி மையத்தில் பெரும் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சத்தம் உணரப்பட்டது.மார்ஷல் ஃபாஹிம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை அதிகாலையில் தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பல மாதங்களுக்கு பிறகு நேற்றைய தினம் காபூலில் ஆம்புலன்ஸ் ஒன்றில் கொண்டுவரப்பட்ட வெடிமருந்துகளை வெடிக்க செய்ததில் 100 பேர் இறந்த சம்பவத்திற்கு மறுநாளே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐஎஸ் குழுவினர் மற்றும் தாலிபன்கள் சமீபத்தில் காபூலில் தாக்குதல்களை நடத்தின.
உள்ளூர் நேரப்படி அதிகாலை ஐந்து மணியளவில் தொடங்கிய தாக்குதலின்போது பல வெடிப்பு சத்தங்களும், சிறியளவிலான துப்பாக்கிச்சூடுகளும் நடைபெற்றதை போன்ற சத்தங்கள் உணரப்பட்டதாக காபூலில் இருக்கும் பிபிசியின் செய்தியாளராக மஹ்ஃபூஸ் ஸுபைட் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியிலுள்ள அனைத்து சாலைகளையும் பாதுகாப்பு படைகள் மூடியுள்ளதாக உள்ளூர் ஊடகமான டோலோ தெரிவித்துள்ளது.
அதிபரின் செய்தித்தொடர்பாளர் இத்தாக்குதலை உறுதி செய்துள்ளதாகவும், தாக்குதல் தொடுத்தவர்களால் ராணுவ மையத்தின் முதல் வாயிலை தாண்டி செல்ல முடியவில்லை என்று அவர் மேலும் கூறியதாகவும் டோலோ செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதலின்போது ராக்கெட்டுகளும், துப்பாக்கிச்சூடும் நிகழ்ந்ததை ஒரு போலீஸ் அதிகாரி உறுதிசெய்துள்ளதாகவும், ஆனால் தற்போது அங்கு அமைதியான சூழலே நிலவுவதாகவும் ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
தாக்குதல் தொடுத்தவர்களில் சிலர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் இராணுவ மையங்கள் அடிக்கடி தீவிரவாதிகளால் இலக்கு வைக்கப்படுகின்றன.
நேற்று ஆம்புலன்சில் வெடிமருந்துகளை நிரப்பி அதை வெடிக்க செய்ததில் 100 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கும் மற்றும் ஒரு வாரத்துக்கு முன்பு காபூல் நகரில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் தாக்குதல் நடத்தி 22 பேரை கொன்ற சம்பவத்திற்கும் தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு அக்டோபரில் காபூல் நகர மையத்தின் மேற் பகுதியிலுள்ள மார்ஷல் ஃபாஹிம் இராணுவ பயிற்சி மையத்திற்கு வெளியே நடந்த ஒரு குண்டிவெடிப்பில் 15 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
Post a Comment