ஆஸ்திரேலியாவின் ‘ஹேமலின் பே’ என்ற கடற்கரையில் நேற்று 150 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் 135 திமிங்கலங்கள் உயிரிழந்தன.பெர்த் நகரையொட்டிய ‘ஹேமலின் பே’ கடற்கரையில் நூற்றுக்கணக்கான பைலட் வகை திமிங்கலங்கள் நேற்று காலை கரை ஒதுங்கியிருப்பதை மீனவர்கள் கண்டனர்.
இது குறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த வன விலங்குகள் துறை அதிகாரிகள், திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் கொண்டு விடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில், கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்களில் 15 திமிங்கலங்களை மட்டுமே கடலுக்குள் விட முடிந்தது. மீதமுள்ள 135 திமிங்கலங்களின் உடல்நிலை மோசமாக இருந்ததன் காரணமாக அவற்றை கடலுக்குள் அனுப்ப இயலவில்லை. எனவே, சிறிது நேரத்தில் அந்த திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன. அவற்றை கரையோரத்தில் புதைக்கும் நடவடிக்கைளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கரை ஒதுங்குவது ஏன்?
‘ஹேப்’ எனப்படும் ஒரு வகை கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் திமிங்கலங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு கரை ஒதுங்கும். அதுதவிர, இரை தேடி முன்னே செல்லும் திமிங்கிலம் வழி தவறி விடுமானால், அதைப் பின்பற்றிச் செல்லும் திமிங்கிலங்களும் வழி தவறி கரை ஒதுங்கும் என்கின்றனர் கடல் ஆராய்ச்சியாளர்கள்.
Post a Comment