ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறும் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் நாளை மோதுகின்றன.டி20 கிரிக்கெட் போட்டிகள் பிரபலமானதைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் 5 நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டியைப் பார்க்க வரும் ரசிகர்களும் குறைந்து வருகின்றனர்.
எனவே டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக அளவில் ரசிகர்களை ஈர்ப்பதற்காக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிமுகம் செய்தது. இந்தப் போட்டிகளில் பிங்க் நிற (இளம் சிவப்பு) பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கு ரசிகர்களிடம் நல்லவரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் நியூஸிலாந்தில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. ஆக்லாந்திலுள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நாளை தொடங்கும் இந்த டெஸ்ட்டில் நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆஷஸ் தொடரில் தோல்வியுற்ற நிலையில் இந்த தொடரை இங்கிலாந்து அணி சந்திக்கிறது.
பகலிரவு டெஸ்ட் போட்டி குறித்து நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் கூறும்போது, “ஈடன் பார்க்கில் விளையாடுவதை நான் எப்போதும் விரும்புவேன். 2014-ல் இந்தியாவை இங்கு தோற்கடித்தோம்.
அந்தப் போட்டியில் நான் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினேன். கடந்த ஆண்டில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்டில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தேன். எந்த நிற பந்தாக இருந்தாலும் சரி. எங்களுக்குக் கவலை இல்லை. சரியான இடத்தில் பந்துகளை வீசும்போது நீங்கள் நினைத்தது நடக்கும்” என்றார்.
Post a Comment