ஐ.நா. மனித உரிமைகள் சபையின் இன்றைய கூட்டத்தில் பன்னாட்டுச் சமூகம் கடுமையான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.இவ்வாறு ஐ.நா. சபையிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உலகத் தமிழர் பேரவையினர், ஐ.நா. சபையின் உதவிச் செயலர் பெல்ட்மனை நேற்று முன்தினம் இரவு சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
அதில் இலங்கை அரசு முன்னேற்றகரமான பாதையில் செல்லவில்லை என்று ஐ.நா.விடம் சுட்டிக்காட்டப்பட்டது.
“முக்கியமாக இறுதிக்கட்டப் போரின் போதான பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதிலிருந்து இலங்கை அரசு தவறி வருகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இன்று நடைபெறும் விவாதத்தில், பன்னாட்டுச் சமூகம் இலங்கை தொடர்பில் கடுமையான முடிவுகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்பட்டது.”- என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபை நாடுகளின் சபை. அங்கு நாடுகளே தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும். தாம் தங்களுடைய பங்களிப்பைச் செய்வோம் என்று ஐ.நாவின் உதவிச் செயலர் உறுதியளித்தார் என்று சுமந்திரன் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 37ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது. இன்று இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சமர்பிக்கவுள்ளார். இதன் பின்னர் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும், தமது கருத்தை முன்வைக்கவுள்ளன.
Post a Comment