Ads (728x90)

பசிபிக் கடலில் அமெரிக்க கடற்படை நடத்தும் சர்வதேச போர் ஒத்திகை வரும் ஜூன், ஜூலையில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா உட்பட 27 நாடுகள் பங்கேற்கும் நிலையில் சீனாவை மட்டும் அமெரிக்கா புறக்கணித்துள்ளது.

அமெரிக்க கடற்படை சார்பில் பசிபிக் கடலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச போர் ஒத்திகை நடத்தப்படுகிறது. இந்த போர் ஒத்திகையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் சீன கடற்படையும் பங்கேற்று வந்தது.

தென்சீனக் கடல் விவகாரம்

தென்சீனக் கடல் முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. சீனாவுக்கு எதிராக வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், புருணே உள்ளிட்ட நாடுகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இதனிடையே தென் சீனக் கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கியுள்ள சீன அரசு அங்கு விமான தளத்தை அமைத்துள்ளது. மேலும் ஏவுகணை தளங்களையும் அதிநவீன ரேடார்களையும் நிறுவியுள்ளது. சீன போர்க்கப்பல்கள் செயற்கை தீவை சுற்றியுள்ள பகுதிகளில் நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. சீன விமானப் படையின் போர் விமானங்கள் செயற்கை தீவில் அவ்வப்போது தரையிறங்குகின்றன. ராணுவரீதியாக செயற்கை தீவுகளை பயன்படுத்த மாட்டோம் என்று சீனா உறுதியளித்திருந்த நிலையில் அதனை அந்த நாடு அப்பட்டமாக மீறி வருகிறது.

இதன்காரணமாக வரும் ஜூன், ஜூலையில் பசிபிக் கடலில் நடைபெறும் போர் ஒத்திகைக்கு சீனாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு வாபஸ் பெறப்பட்டுவிட்டது என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த போர் ஒத்திகையில் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், இந்தியா உட்பட 27 நாடுகள் பங்கேற்கின்றன.

Post a Comment

Recent News

Recent Posts Widget